ஆட்களை ஏற்றிச் செல்லும் "குட்டி யானை"களை வளைத்துப் பிடிக்கும் ஆர்டிஓ அதிகாரிகள்
நாமக்கல்: சட்ட விரோதமாக தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோக்களில் (குட்டி யானை) ஆட்களை ஏற்றிச் செல்வதைத் தடுக்கும் வேலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கிராமப் பகுதிலிருந்து ஆட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்குவதால் அதில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
மே 21ம் தேதி இப்படித்தான் கந்தம்பாளையம் அருகே 2 சரக்கு ஆட்டோக்கள் கவிழ்ந்ன. இதில், 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தாமோதரன், சண்முக ஆனந்த், சரவணன், முருகேசன், வெங்கடேஷன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வார காலமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, சரக்கு வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், கடந்த ஒரு வாரத்தில் கிடாவெட்டு நிகழ்ச்சி, கோவில் பொங்கல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற 58 சரக்கு ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 38 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.