மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை.. ரப்பர் தோட்டங்களில் தொழில் போச்சு!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அரசு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 3௦௦௦ க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றான ரப்பர் பால் வெட்டும் பணி பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கீரிப்பறை, காளிகேசம், மனலோடை, பரளியாறு உள்ளிட்ட அரசு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் வெட்டும் பணி பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதால் அங்கு பணி செய்யும் ஏராளமான தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. அதேபோல தனியார் ரப்பர் தோட்டங்களிலும் பால் வெட்டும் தொழில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் ருபாய் இழப்பு என கூறப்படுகிறது.
படகு சேவை பாதிப்பு
இதற்கிடையே, கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்று, சாரல் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமான, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் சூரைகாற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது. மிதமான சாரல் மழையும் பெய்து வருகிறது. கடலில் காற்றும் ராட்சத அலையும் இருந்ததால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பூம்புகார் படகு சேவை 2 வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அணைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்