டிடிவியின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் குத்தாட்டம்... சொப்பன சுந்தரி பாட்டு யாருக்காக?
ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் நடனக் கலைஞர்கள் சொப்பன சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மக்களை குஷிபடுத்தியுள்ளனர்.
Recommended Video
சென்னை : சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக வாக்காளர்களை சந்தித்து டிடிவி. தினகரன் நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று தண்டயார்பேட்டை பகுதியில் தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் நடனக்கலைஞர்கள் சொப்பன சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தினகரனுக்காக காத்திருந்த மக்களை குஷிபடுத்தினர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் 20 ரூபாய் ஹவாலா டோக்கன் விவகாரத்தால் தொகுதி பக்கமே தலைகாட்டுவதில்லை என்று ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். அதாவது தினகரனுக்கு வாக்களிக்க ரூ. 20 டோக்கன் கொடுக்கப்பட்டு தேர்தலுக்குப் பின் ரூ. 10 ஆயிரம் வரை பணம் வாக்காளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் தேர்தலுக்குப் பின் பணம் கொடுக்கவில்லை என்றும் வாக்காளர்கள் புலம்புவதாக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை விமர்சித்து வருகின்றனர்.
எனினும் டிடிவி. தினகரன் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். திறந்த ஜீப்களில் தெமது ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் புடை சூழ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் தினகரன்.
தண்டையார்பேட்டையில் நடந்த கூட்டம்
நேற்று தண்டையார்பேட்டை பகுதியில் தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலையின் நடுவே மேடை போடப்பட்டு டிடிவி தினகரன், சசிகலா, ஜெயலலிதா படங்களுடன் பேனரும் மேடையில் வைக்கப்பட்டிருந்தது.
குத்தாட்டம் போட்ட நடனக்கலைஞர்கள்
தினகரனின் வருகையை எதிர்பார்த்து பெண்கள் கையில் பதாகைகளுடன் மேடை முன்பு காத்திருந்தனர். ஆனால் அவர் வர காலதாமதம் ஆகவே தினகரன் ஆதரவாளர்கள் நடனக்கலைஞர்களை மேடையில் இறக்கி விட்டனர்.
சொப்பன சுந்தரி பாட்டுக்கு என்னா ஆட்டம்
பெண் ஒருவர் நடுவே ஆட அவரைச்சுற்றி 5 ஆடவர்கள் துணை நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். மேடையில் என்னென்ன பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்கள் என்பது தான் ஹைலைட்டான விஷயம். சொப்பன சொப்பன சுந்தரி நான் தானே பாடலுக்கு அந்தப் பெண் ஆடிய நடனத்தை காண சகிக்கவில்லை.
தேவையா இது
இந்த கிக்கு பாடல் முடிந்து அடுத்த சேஞ்ச் ஓவர் பாட்டு 'லாலா கடை சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி'. கட்சிக்காரர்கள் நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் அரங்கேறும் நடனங்களுக்கு அளவே இல்லையா என்று கேட்க வைத்தது இவர்களின் நடனம்.
தலைவர்களின் பேச்சு ஒலித்த மேடைகள்
அதிமுக, திமுக பொதுக்கூட்ட மேடைகள் என்றால் தலைவர்கள் வர நேரம் எடுத்தாலோ அந்த விழா நடைபெறும் இடத்திலோ கட்சிகளின் பாடல்களும், அண்ணா பெரியாரின் பேச்சுகளும் ஒலிக்கும். அதிமுக கூட்டங்கள் என்றால் எம்ஜிஆர் வேடத்தில் வந்து நடனக்கலைஞர்கள் அவரின் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்கள். காலம் கலிகாலம் என்பதை உணர்த்தியது டிடிவி தினகரன் மேடையில் நடனக்கலைஞர்கள் போட்ட குத்தாட்டம்.