ஈழம்: பன்னாட்டு விசாரணை- பொதுவாக்கெடுப்பு ஆதரவு கட்சிகளுக்கு ஓட்டு- உருத்திரகுமாரன் வேண்டுகோள்!
சென்னை: ஈழத் தமிழர் படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை மற்றும் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கும் கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு மையமாக கொண்டு இந்திய கட்சிகளையும் - இந்திய அரசையும் கோரும் தீர்மானம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை விளக்கி சென்னை செய்தியாளர்களிடம் நியூயார்க் நகரில் இருந்து ஸ்கைப் மூலமாக நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பேசியதாவது:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், போர்குற்றம் ஆகியவற்றை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர குழுவை நிறுவ ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் .
ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அனைத்துல நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்திய அரசு அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . வங்காள தேசம் பிரிந்து செல்ல இந்தியா உதவியது போலவும் , தென் சூடான், கிழக்கு தீமூர் , ஸ்காட்லான்ட் போன்ற நாடுகள் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய எந்த தடையும் சொல்லாதது போலவும் , தனி ஈழத்திற்க்கான பொது வாக்கெடுப்பிலும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்க பன்னாட்டு விசாரணையும் , பொது வாக்கெடுப்பும் அவசியம் ஆகிறது . அதனால் வரும் தேர்தலில் இத்தகைய முன்னெடுப்புகளை எடுக்கக் கூடியே கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையாக தமிழக அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்..
இந்திய நாட்டின் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தமிழீழம் அமையும். அப்படி அமையும் தமிழீழ அரசு இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும்.
சிங்கள அரசை போல தமிழீழ அரசு சீனாவின் பக்கம் சென்று இந்தியாவிற்கு துரோகம் இழைக்காது. தமிழக அரசும் விரைந்து தமிழீழ மக்களின் துன்பத்தை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
தமிழீழமே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு உருத்திரகுமாரன் கேட்டுக் கொண்டார்.