குடும்பத்தில் ஒருவரை குடிகாரராக மாற்றியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.. ராமதாஸ் சாடல்
திருக்கோவிலூரில் நடந்த பாமக மகளிர் அணி சார்பில் நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் ராமதாஸ் பேசும்போது குடிப்பழக்கத்தையும், இலவசத் திட்டங்களையும் சாடிப் பேசினார்.
ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் அதிகம் பேர் குடிக்கின்றனர். திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்ததால் ஏற்பட்ட சாதனை இது ஒன்றுதான். இதன் பலனாக இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் தமிழகத்தில்தான் உள்ளனர்.
குடிப்பழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குவதால் அதிக குற்றசெயல்களும், அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. எனவே உடனே மதுக்கடைகளை மூடவேண்டும். தமிழகத்தில், ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருக்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாறவேண்டும்.
இலவசங்கள் தருவதை நிறுத்தவேண்டும். அதற்கு மாறாக தரமான கல்வியை கொடுக்க வேண்டும். இந்த நிலை உருவாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும்.
இந்திய நாடு விவசாயத்தை நம்பியுள்ள நாடு. அதிலும் குறிப்பாக தமிழகம் விவசாயத்தில் சிறந்து விளங்கிய காலம்மாறி தற்போது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வேளை வயிராற சாப்பிட முடியவில்லை.
தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மூன்றரை கோடி பேருக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. 47 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் இன்னமும் தமிழக மக்களால் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை எடுத்து கட்டமுடியாத நிலை உள்ளதா? ஆட்சியாளர்கள் நம்மை பிச்சைக்காரர்களாக பார்க்கின்றனர்.
ஓட்டுப்போட பணம் தந்தால் வாங்காதீர்கள், ஓட்டு விலை மதிப்பில்லாதது ஆகும். ஓட்டளிப்பு உங்களின் உரிமை என்றார் அவர்.