ரமலானில் நோன்பு வைப்பதற்கான விதிமுறைகள்
சென்னை: ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
புனித ரமலான் மாதம் துவங்கிவிட்டது. உலக முஸ்லீம்கள் நோன்பு வைத்து வருகிறார்கள். நோன்பு வைப்பவர்களுக்கு என்னவெல்லாம் தாங்கள் செய்யலாம், செய்யக் கூடாது என்பது பற்றி சந்தேகங்கள் இருக்கலாம்.
உங்களுக்காக சில தகவல்கள் இதோ...
உணவு
நோன்பு இருப்பவர்கள் யாராவது மறந்துபோய் சாப்பிட்டாலோ, நீர் குடித்தாலோ நோன்பு முறியாது. ஆனால் தெரிந்து சாப்பிட்டால் நோன்பு ஏற்கப்படாது. அதே போன்று வேண்டும் என்றே வாந்தி எடுத்தாலும் நோன்பு செல்லாது.
உறவு
நோன்பு இருக்கையில் உடல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. மாதவிடாய் வந்துவிட்டால் நோன்பு செல்லாது.
குளியல்
நோன்பு இருக்கையில் குளிப்பது, வாயை கொஞ்சமாக தண்ணீர் வைத்து கழுவுவது ஏற்றுக் கொள்ளப்படும். கண்ணுக்கு மை, மருந்து போடலாம். மேலும் உடல் நலக்குறைவுக்காக ஊசியும் போட்டுக்கொள்ளலாம்.
முத்தம்
நோன்பாளிகள் மனைவிக்கோ, கணவருக்கோ முத்தம் கொடுக்கலாம். மவுத்வாஷ் பயன்படுத்தலாம்.
நோயாளிகள்
நோயாளிகள், பயணம் செய்பவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க அனுமதி உண்டு. ஆனால் அவர்கள் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும்.
முதியவர்கள்
முதுமையாலோ அல்லது நிரந்தர நோயாலோ நோன்பு வைக்க முடியாதவர்கள் எத்தனை நாட்கள் நோன்பு வைக்கவில்லையோ அத்தனை நாட்களுக்கு கணக்கு பார்த்து ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு ஏழை என்ற கணக்கில் உணவு கொடுக்க வேண்டும்.
கர்பிணி
கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ரமலானின்போது விட்ட நோன்பை பிறகு வைக்கலாம் அல்லது ஏழைகளுக்கு உணவு அளிக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒரு ஏழை என்ற கணக்கில் உணவு கொடுக்க வேண்டும்.