சசிகலா பொதுச் செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையத்தில் 61 பக்க அறிக்கை தாக்கல் செய்தது ஓ.பி.எஸ். அணி
சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் இன்று பதில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை: சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணியினருக்கு அனுப்பி இருந்தது. அதற்கான பதிலை ஓபிஎஸ் அணியினர் இன்று வழங்கினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது.
இதையடுத்து, இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி கடந்த 10ம் தேதி, 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதில், அதிமுக சட்டவிதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் அணிக்கு நோட்டீஸ்
சசிகலா அனுப்பி இருந்த பதில் மனுவை அடுத்து, இப்பதிலுக்கு மார்ச் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பதில் மனு
தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீஸுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவின் பதிலுக்கான விளக்கத்தை தயார் செய்து, தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்தனர்.
சசிகலா நியமனம் செல்லாது?
கட்சி பொதுக் குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் கிடையாது. இதன் அடிப்படையில் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
அடிப்படை உரிமை
கட்சிப் பொதுக் குழுவுக்கு விதிகளை மாற்றுவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே கட்சிப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக விதிகளில் கூறப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் அணி விளக்கம் அளித்துள்ளது. 61 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.