எல்லாம் வாய்சவடால்தானா.. தேர்தலை சந்திக்க அஞ்சி நடுங்குகிறதா அதிமுக?
Recommended Video
சென்னை: திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவிக்கவில்லை.
திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்எல்ஏ, ஏ.கே.போஸ் மரணமடைந்ததாலும், திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு காரணமாகவும் அவை காலியாக உள்ளன. இருவருமே ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தனர். எனவே இன்று இத்தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையர் இன்று அதை அறிவிக்கவில்லை.
தலைமைச் செயலாளர் கடிதம்
இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தமிழக தலைமைச்செயலாளர் தனக்கு கடிதம் எழுதி இன்று தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தனது கடிதத்தில் தமிழகத்தில் புயல் உருவாகி பெரும் மழைக்கான சூழ்நிலை இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தார்.
ஆளும் தரப்பு
தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்த முடிவை, முதல்வரை கலந்தாலோசிக்காமல் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆளும் தரப்பினருக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதில் விருப்பமில்லை என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவது டிசம்பர் மாதம்தான். இடைத் தேர்தலும் கூட அப்போதே நடத்தியிருக்க முடியும். இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது என்பதற்காக டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தல் தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகிறது. மேலும் தமிழகம் வடகிழக்கு பருவமழையை சுமார் மூன்று மாதங்களுக்கு எதிர்கொள்ளும். இந்த காலகட்டங்களில் இதற்கு முன்பாக இடைத்தேர்தல்களை நடந்ததில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
இதெல்லாம் காரணமா
கடுமையாக நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட வெற்றிகரமாக தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நடத்த முடியும் போது பருவமழைக்கெல்லாம் பயந்துகொண்டு இடைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. இதற்கான கோரிக்கையை தமிழக அரசு விடுத்திருப்பது என்பது தேர்தலை கண்டு அச்சப்படும்போக்கு ஆளும் தரப்பில் இருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
சீரழியும் நிர்வாகம்
உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், பிரதிநிதிகள் இன்றி உள்ளாட்சி நிர்வாகம் சீரழிந்து வருகிறது. விரைவில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பின்வாங்கி கொண்டே உள்ளன. தேர்தல் பயம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த அறிவிப்புக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
வெயில் அடிச்சாலும் லீவு
இப்படி தேர்தலை நடக்காமல், மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் ஒரு அரசு நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமை இல்லாத நிலையில், தினகரன் போன்ற அதிமுக வாக்கு வங்கியை இரண்டாக உடைத்து ஒரு தலைவர் உருவாகிவிட்ட நிலையில், தேர்தலை சந்தித்து ஆர்கேநகர் போல அவமானத்தை சந்தித்து விடக் கூடாது என்ற அச்சத்தில் ஆளும் தரப்பு இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என வீர வசனம் பேசியது ஓபிஎஸ்தான் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இப்படியே போனால், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் அறிவித்தால், அப்போது வெயில் காலம், தேர்தல் வேண்டாம் என்று கூட இவர்கள் கூறக்கூடும்.