நெல்லை: டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க 400 போட்டி – ஆளுங்கட்சியினருக்கு முன்னுரிமை?
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் புறநகர் பகுதியில் 177 கடைகளும் மாநகர பகுதிகளில் 51 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுபான பிரியர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் பார்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பார்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் விடப்பட்டு அதிக தொகை கோருபவர்களுக்கு உரிமம் வழங்கப்படும். இந்த நிலையில் இந்தாண்டுக்கான பார் டெண்டர் நெல்லை முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நடந்தது.
பார் டெண்டர் கேட்டு ஒரு கடைக்கு 3 பேர் விகிதத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். பார் டெண்டர்களை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மங்களசுப்பிரமணியன் தலைமையில் பிரிக்கப்பட்டு கடைகள் வாரியாக கூடுதல் தொகைக்கு கேட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
குறைந்தபட்சமாக புறநகர் பகுதியில் ஒரு கடையில் பார் ரூ.30 ஆயிரத்து 900க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக செங்கோட்டையில் உள்ள ஒரு பார் ரூ.4 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. மாநகர பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை டெண்டர் விடப்பட்டது.
இதுவரை 107கடைகள் டெண்டர் விடப்பட்டன. தொடர்ந்து மற்ற கடைகளுக்கு டெண்டர் விடும்படி இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் பார் டெண்டர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த டெண்டர்கள் அனைத்தும் ஆளும்கட்சிக்கு தெரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் குடிமகன்கள்.