டிஜிபியின் சாதாரண உத்தரவால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - ரெக்கை கட்டி பறந்த வதந்திகள்!
டிஜிபியின் சாதாராண உத்தரவானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வதந்திகள் பரவவும் காரணமாகி விட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படையினர் தங்களின் முகாம்களுக்கு திரும்பி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற டிஜிபி ராஜேந்திரனின் உத்தரவு தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது.
இப்போதெல்லாம் 10 நிமிடத்திற்கு ஒரு பிரேக்கிங் செய்திகள் வெளியாகின்றன. இன்று பிற்பகலில் வெளியான பிரேக்கிங் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சிறப்பு காவல்படையினர் முகாமிற்கு திரும்புவதற்காக டிஜிபி போட்ட சாதாரண உத்தரவுதான் பரபரப்பை கிளப்பி விட்டது.
அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா ஆலோசனையில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகமானது.
தீயாய் பரவிய வதந்தி
உடனே சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீயாக பரவின. திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின.
ஆட்சி கலைப்பு?
தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டசபை முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன.
டிஜிபி விளக்கம்
இந்த வதந்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்திலேயே காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இது ஒரு வழக்கமான நிகழ்வு தான், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் டிஜிபி ராஜேந்திரன் விளக்கம் தந்தார்.
வழக்கமான நடைமுறை
பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாலியனை திருப்பி அனுப்பாமல் எஸ்.பி.க்களும், கமிஷனர்களும் வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்ததால் அனைவரையும் அந்தந்த கம்பனிகளுக்கு பட்டாலியன்களுக்கு திருப்பி அனுப்பத்தான் இந்த உத்தரவு. இது வழக்கமாக அனுப்பப்படும் கடிதம்தான் என தகவல் வெளியான பின்னரே தமிழகத்தில் பரபரப்பு ஓய்ந்தது.
செப்டம்பர் மாத பரபரப்பு
செப்டம்பர் மாதம் வந்தாலே தமிழகத்திற்கு பரபரப்பாகி விடுகிறது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சிறைக்கு போனார் ஜெயலலிதா. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவியது. அதே போல இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் கருணாநிதி, நடராஜன் பற்றியும் வதந்தி பரவின.