மனித வெடிகுண்டு அச்சுறுத்தல்: கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு பலத்த பாதுகாப்பு
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்துக்கு புனித நீராட வரும் முக்கிய பிரமுகர்களை கொல்ல 4 பெண் மனித வெடிகுண்டுகள் நடமாடுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தேரோட்டம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மகாமகம் பெருவிழா கடந்த சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன்
தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி சென்று கொண்டிருக்கிறார்கள். நேற்று வரை சுமார் 20 லட்சம் பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில், தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மகாமக குளக்கரை பகுதியில் 4 பெண் மனித வெடிகுண்டுகள் சந்தேகம் ஏற்படாத வகையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பிரமுகர்களை குறிவைத்து சுற்றும் அவர்கள், தக்க நேரத்தில் வெடிகுண்டை வெடிக்க செய்து குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை கொல்வார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்று, பெயரை குறிப்பிட்டு அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. இத்தகவலையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்த ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி, ஐ.ஜி.க்கள்,டி.ஐ.ஜி.க்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று தேரோட்டம், நாளை ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் இன்றும், நாளையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமையன்று மகாமக விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நடைபெறுவதால், அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள்.
பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற மர்ம கடிதம் வந்திருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாமக குளக்கரையில் சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் சுற்றித் திரிகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.