ஈரோட்டில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 15-வது நாளாக தொடர் போராட்டம்
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 15-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு: 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இன்று 15-வது நாளாவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடுமுழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 67 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தேசிய ஊரக அஞ்சல் சேவகர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராமபுறத்தில் அஞ்சல் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
போராட்டத்தின் 15 ம் நாளான இன்று ஈரோடு ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏழாவது ஊதிய குழுவை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும், கமலேஷ் சந்திரா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தங்களது போராட்டம் 15 நாட்களை கடந்தும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அஞ்சல் ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் உறுதிபடதெரிவித்தனர்.