துருப்பிடித்துக் கிடக்கும் தண்டவாளங்கள்; ரயில் விபத்துக்கு இதுவே காரணமாம்- சொல்கின்றார்கள் அதிகாரிகள
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ரயில் தண்டவாளங்கள் துருப் பிடித்து பலம் இழந்து காணப்படுவதால்தான் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விருத்தாசலம் அருகே பூவனூரில் மங்களூரு - சென்னை இடையிலான ரயில் நேற்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் தனது குழுவினருடன் ஆய்வு நடத்தினார்.
அதில் அந்தப் பாதையில் ரயில் தண்டவாளம் துருப்பிடித்து இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வு செய்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலோர மாவட்ட தண்டவாளங்கள்:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளில் தண்டவாளங்கள் துருப் பிடித்து சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. இதைப் பராமரிப்பதில் ரயில்வேக்கு கூடுதல் செலவாகிறது. எனவே கடலோர மாவட்டங்களில் துருப் பிடிக்காத தண்டவாளங்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. விருத்தாசலம் ரயில் விபத்தால் இந்தக் கருத்து மேலும் வலுத்துள்ளது.
முன்னேற்றம் இல்லா ரயில்வே:
வளர்ச்சி பெற்ற நாடுகளில் ரயில் தண்டவாளத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிலையில், இந்திய ரயில்வேயின் தண்டவாளங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் துருப் பிடிக்கும் நிலையிலேயே உள்ளன. கடலோரப் பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களே அதிக அளவில் துருப் பிடிக்கின்றன. அத்துடன் ரயில்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் தண்டவாளங்களில் விழுவதாலும் துருப் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
தண்டவாளங்கள் குறித்த ஆராய்ச்சிகள்:
இந்தியாவில் சுமார் 25,000 ரயில் பெட்டிகள் உள்ளன, அதில் 500 பெட்டிகளில் மட்டுமே "பயோ டாய்லெட்" வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களிலும் இந்த வசதியைக் கொண்டு வருவதற்கு சுமார் 15 ஆண்டுகளாகும். இந்த நிலையில், இரும்பால் அல்லாது வேறு உலோகங்களால் செய்யப்படும் ரயில் தண்டவாளங்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் லக்னோவில் உள்ள ரயில்வே துறை ஆராய்ச்சி வடிவமைப்பு நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.
5 ஆண்டுகளில் 40 விபத்துகள்:
ஐந்தாண்டுகளுக்கு முன் ரயில் தண்டவாளக் கோளாறுகள், விரிசல்களால் ஆண்டுக்கு 40 விபத்துகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது ரயில்வே பொறியாளர்களின் சீரிய முயற்சியால் இந்த விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார். இதுபோன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விரைவில் தரமான தண்டவாளங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைத்தால்தான் ரயில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்றார்.