தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் என்று புதிய துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் எஸ். அனந்த சந்திர போஸ் உறுதி அளித்துள்ளார்.
மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக எஸ். ஆனந்த சந்திரபோஸ் இன்று பொறுப்பேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் துறைமுக செயல்பாட்டின் வல்லுநர் ஆவார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதார முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர். மேலும் கராக்பூரில் உள்ள ஐஐவு- யில் தொழில் உறவு மற்றும் தொழில் உளவியலில் பட்டய படிப்பு முடித்தவர்.
இவர் சென்னை துறைமுகத்தில் உதவி போக்குவரத்து மேலாளர் பணியில் சேர்ந்து, சரக்கு பெட்டக முனைய மேலாளராகவும், கப்பல் கூலித் தொழிலாளி வாரியத்தின் துணை தலைவராகவும் பணிபுரிந்தவர். சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தில் ஆலோசராக மொரிஸ்சியஸில் இரண்டு வருடங்கள் பணி புரிந்து, ஜெமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில் சரக்கு பெட்டகங்களை கையாளும் முறைகளை பற்றி சிறப்புறை வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தின் போக்குவரத்து மேலாளராக பணியாற்றிய பின் அந்தமான் துறைமுகத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், ஒரிஸாவிலுள்ள பாரதீப் துறைமுகத்தின் துணை தலைவராக பணியாற்றினார். சென்னையிலுள்ள தேசிய துறைமுக மேலாண்மை மையத்தில், பகுதி நேரவிரிவுரையாளராக இருந்தார்.
அவர் பிலிப்பைன்ஸ், கென்யா, மலோசியா, ஜப்பான் உட்பட அமெரிக்கா மற்றும் ஐரேப்பா நாடுகளில் நடந்த பல்வேறு பயிற்சி திட்டங்களில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தலைவராக பொறுப்பேற்றுள்ள அவர், உலக அளவில் நிலவி வரும் மந்தமான பொருளாதார நிலையிலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கப்பல்துறை அமைச்சகத்தின் இந்த நிதியாண்டிற்கான இலக்கான 30 மில்லியன் டன்களை கையாளும்.
தற்போதைய கொள்ளளவான 33.34 மில்லியன் டன்களிலிருந்து 85 மில்லியன் டன்களாக உயர்த்துவதற்கு பல்வேறு கொள்ளளவு அபிவிருத்தி திட்டங்களை பொதுதனியார் கூட்டமைப்பின் கீழ் வழங்கி, 2015 16 ஆண்டிற்குள் முடித்து, துறைமுகம் வாடிக்கையாளுக்கு சிறந்த சேவையை வழங்கும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் துணைத்தலைவரான நடராஜன், தலைவர் இல்லாத காரணத்தினால் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் துணைத்தலைவராக தனது பணியை தொடருவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.