பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க செல்கையில் விபத்து: 2 மகள்களையும் பறிகொடுத்த எஸ்.ஐ.
கோவை: கோவையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க சென்ற வழியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அக்காவும், தங்கையும் பலியாகியுள்ளனர்.
கோவை கே.ஜி. சாவடியில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(51). அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அவரது மகள்கள் இந்து ப்ரியா(21), பூஜா(19). இந்து தனியார் பொறியியல் கல்லூரியிலும், பூஜா தனியார் ஆயுர்வேத கல்லூரியிலும் படித்து வந்தனர். இந்துவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துள்ளது. பணியில் சேர அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை ஜெயப்பிரகாஷ் தனது இரண்டு மகள்களையும் தனது மொபட்டில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். மதுக்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே செல்கையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார் ஜெயப்பிரகாஷ்.
முந்த முயன்றபோது மொபட் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் இந்து மற்றும் பூஜா சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த ஜெயப்பிரகாஷை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான மதுக்கரையை சேர்ந்த வேலுச்சாமியை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க செல்லும் வழியில் சகோதரிகள் பரிதாபமாக பலியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.