நடுரோட்டில் சக போலீசுடன் கட்டி உருண்டு சண்டையிட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்
மதுரை: மதுரையில் மக்கள் முன்பு சக காவலருடன் சண்டை போட்ட எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் உள்ள தல்லாக்குளம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக உள்ளவர்கள் துரை, பிரேமச்சந்திரன். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்.ஐ. ஆக பணியில் சேர்ந்தனர். முதலில் நண்பர்களாக இருந்த அவர்கள் பின்னர் பகைவர்களாகிவிட்டனர்.
பகை முற்றி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது மக்கள் முன்பு அவர்கள் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
மக்கள் பார்க்கிறார்களே என்று கூட இல்லாமல் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். துரை பிரேமச்சந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது சண்டையிட்டதை இருவருமே முதலில் மறுத்தனர். பின்னர் தங்கள் தவறை ஒப்புக் கொண்டனர். பிரேமச்சந்திரனை தாக்கியதற்காக துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.