அணு உலையை எதிர்ப்பதால் என்னை அழிக்கப் பார்க்கிறார்கள்.. உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு
நெல்லை: கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதால் தன்னை ஆரியத்துவ சக்திகள் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 5 ந்தேதி டர்பைன் பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு மே 20 ந்தேதி பழுது சரி செய்யப்பட்டு மின்னுற்பத்தி துவங்கப்பட்டது. அதில் இருந்து நேற்று வரை 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. இதனிடையே நேற்று வால்வு பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று காலை பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்னுற்பத்தி துவங்கியுள்ளது
இந்த நிலையில், உதயகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கிறது. பராமரிப்புப் பணிகள் நடக்கின்றனவாம். இப்போது இரண்டாவது அணு உலையில் தொழிற்நுட்பக் கோளாறாம். அதுவும் மூடப்பட்டுவிட்டது.
இந்த லட்சணத்தில் 3, 4-வது அணு உலைகளுக்கு காங்கிரீட் போடுகிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் கவனிக்காமல் இருக்க, பிரச்சினையை முற்றிலுமாக திசைதிருப்ப என்மீது அவதூறு பரப்புகிறார்கள். தமிழ் மக்களே, நாட்டு நடப்புக்களை புரிந்துகொள்ளுங்கள். பாசிச சக்திகளின் பரப்புரையைப் புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பிள்ளை, ஆரியத்துவ அழிவு சக்திகள் என்னை அழிக்கப் பார்க்கிறர்கள் என்று தெரிவித்துள்ளார்.