அதிமுகவில் இணையப் போவதில்லை: தமாகாவின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் இணையப்போவதில்லை என்று தமாகாவின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதால் அக்கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி புது கட்சி துவங்கி இருப்பதால், தேமுதிக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் தமாகா மூத்த தலைவர்கள் சிலரும் கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், கட்சியில் இருந்து விலகவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமாகாவும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 26 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமாகா மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் ஒருப்பகுதியாக இன்று அவர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், துணை தலைவர் ராகுல்காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர்கள் அதிகாரபூர்வமாக தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி என்பது தாய்வீடு போன்றது. வாசனைத் தவிர அனைவரும் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
இவர்களைப் போல் மற்றொரு மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக.வில் இணைய முடிவு செய்திருப்பதாக வெளியானது.
ஆனால் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்க நேரம் மட்டுமே கேட்டததாகவும், அதிமுகவில் இணையப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.