மேகங்கள் வாழ்த்துச் சொல்ல..நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஓய்வு பெற்றார் !
சென்னை: மேகங்கள் வாழ்த்துச் சொல்ல சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பணியில் இருந்து வியாழக்கிழமை மாலை ஓய்வு பெற்றார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.ஆர். ரமணன். இவர், சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார். பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 1980-ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே பதவி உயர்வுக்கான பல தேர்வுகளையும் எழுதினார்.
சென்னை பல்கலையில், பி.எச்டி ஆய்வு பட்டம் படித்து முனைவர் பட்டம் பெற்றார். 2002 -ஆம் ஆண்டு முதல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து வரும் ரமணன் வியாழக்கிழமை பணி ஒய்வு பெற்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ரமணன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கைகோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன.
மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பின்னர், கல்லூரி மாணவர்களிடையே வானிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
என்னதான் அவர் ஓய்வு பெற்றாலும் மழை வரும் போது நமக்கு ஞாபகத்துக்கு வருவது ரமணன் தான். அதிலும் அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர். முன்பு எல்லாம் அவர் மழை வரும் என்று அறிவித்தால் அன்று மழை வராது என்று மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
சென்னையில் மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்த்ததில் இருந்து ரமணனை இனி கிண்டல் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். ரமணன் சார் மன்னித்துவிடுங்கள், இனி உங்களை கிண்டல் செய்ய மாட்டோம் என்று சமூக வலைதளங்களில் மக்கள் தெரிவித்திருந்தனர். அந்த அளவுக்கு அவர் பிரபலம்.
இப்படி வானிலை அறிக்கை தெரிவித்து பிரபலமான ரமணன் 36 ஆண்டுகால பணிக்கு பின்னர் நேற்றோடு ஓய்வு பெற்றார்.