10ம் வகுப்பு முடிவுகள்: கணிதத்தில் மட்டும் குறைவு- மற்ற பாடங்களில் அதிக தேர்ச்சி
சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.
இந்த வருடம் 11,13,475 பேர் தேர்வு எழுதினர். இது கடந்த 2013 இல் 11,19,478 என்ற அளவில் இருந்தது.
அந்த வகையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 6003 பேர் குறைவாகவே தேர்வு எழுதியுள்ளனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு:
பள்ளிகள் மூலம் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு 10,20,749 பேர். இதுவே கடந்த ஆண்டில் 10,51,062 பேராக இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 30,313 பேர் குறைவு.
மாணவர்கள் அதிகம்:
பள்ளிகள் வாயிலாக இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் 5,18,639 பேர், மாணவிகள் 5,02,110 பேர். மாணவிகளை விட மாணவர்கள் அதிகம் பேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
பள்ளிகள் வாயிலாக தேர்வு எழுதியவர்களில், சென்ற ஆண்டு 9,35,215 பேர் தேர்வு பெற்று தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. இந்த ஆண்டு, 9,26,138 பேர் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதம் 90.7% ஆக அதிகரித்துள்ளது.
மதிப் “பெண்கள்” :
பள்ளிகள் வாயிலாக தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 88%. இது கடந்த ஆண்டு 86% ஆக இருந்தது.மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.6% இது கடந்த ஆண்டு 92% ஆக இருந்தது.60% க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 7,10,010 ஆகும்.
கணிதத்தில் குறைவு:
இந்த ஆண்டு கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 18,682. இதுவே கடந்த ஆண்டு 29,905 ஆக இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 11223 பேர் குறைவாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் அதிகம்:
இந்த ஆண்டு அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 69,560 பேர். இது சென்ற ஆண்டில் 38,154 பேராக இருந்தது. அந்த வகையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு, 31406 பேர் அதிகமாக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல் சாதனை:
சமூக அறிவியலில் இந்த ஆண்டு 26,554 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டில் 19,680 ஆக இருந்தது, அந்த வகையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்டம் எடுத்தவர்கள் 6874 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியிலும் அதிகம்:
மொழிப் பாடங்களில் பெரும்பாலும் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக அளவிலான மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழ், ஆங்கில கண்மணிகள்:
10 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 93.81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 255 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.ஆங்கிலத்தில் 93.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் 677 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.