ராமரை அவமதிப்பதா? இயக்குநர் சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் புகார்
சென்னை: ராமாயண இதிகாச நாயனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக நடிகரும்,நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர்.முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம் வருமாறு:
சமீப காலமாக "நாம் தமிழர்" என்கின்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் சைமன் என்கின்ற சீமான் என்பவர், இந்த நாட்டின் இதிகாச புருஷன், சக்கரவர்த்தி திருமகன் உலகில் உள்ள ஹிந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீ. ராமபிரானை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார். இந்த வீடியோ யுடுயூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து நானும் என் வீட்டில் உள்ள அனைவரும் மட்டுமன்றி என் நண்பர்களும் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளானோம்.
இவர் சிவலிங்கத்தையும் இதைப்போலவே கேவலமாக பேசியுள்ளார்.
நம் பாரதத்தின் பெரும்பான்மையான சமுதாயமான இந்துக்களை மிகவும் புண்படுத்தி பேசியுள்ளார்.
தமிழ் நாடு போன்ற அமைதிப் பூங்காவில் இப்படி ஒருவர் ஒரு மதத்திற்கு எதிராக பேசி, கடவுள்களை அசிங்கமாக பேசுவது நாட்டின் ஜன நாயகத்திற்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கிறது.
மேலும் , அனைத்து சமுதாயத்தையும் சமமாக பாவிக்கும் நீங்கள், சைமன் என்கிற சீமான் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் என்று கூறியுள்ளார்.