நல்ல நேரம் பார்த்து பாஜகவில் சேர்ந்த எஸ்.வீ சேகர்!
சென்னை: நல்ல நேரம் பார்த்து பாஜகவில் இன்று சேர்ந்தார் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்வீ சேகர்.
அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்னர் காங்கிரஸில் இணைந்து விலகினார்.
இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார்.
சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று பிற்பகல் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார்.
4.30 மணிக்கு...
தான் பாஜகவில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 4.30 மணியளவில் பாஜக தலைமைக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்தார் எஸ்.வி. சேகர்.
அப்போது, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து எஸ்வீ சேகர் நம்மிடம் பேசுகையில், "நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் எனக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார்.
எனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. இருக்கும் இடத்துக்கு என்னால் என்றுமே நன்மைதான் உண்டாகுமே தவிர கெட்ட பெயரை உண்டாக்கமாட்டேன். இதுவரை நான் இருந்த கட்சிகளில் எனக்கு யார் மீதும் வருத்தமில்லை. என் மீதும் யாருக்கும் வருத்தமிருக்காது.
நரேந்திர மோடியின் தலைமைதான் இன்று நாட்டுக்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த நாடும் இப்போது உணர்ந்து வருகிறது," என்றார்.