ஓபிஎஸ் - எடப்பாடி இணைப்பு... கட்டாயப்படுத்தியது மோடியா? இடைத்தரகரா?... எஸ்.வி.சேகர் கேள்வி
ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் அணிகள் இணைவதற்கு மோடி கட்டாயப்படுத்தினாரா அல்லது அவரது பெயரை பயன்படுத்தி இடைத்தரகர் யாராவது கட்டாயப்படுத்தினாரா என்று எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக ஏற்படுவதற்கு மோடி கட்டாயப்படுத்தினாரா அல்லது அவரது பெயரை பயன்படுத்தி இடைத்தரகர் யாராவது கட்டாயப்படுத்தினாரா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டன. இதனால் இரட்டை இலையை இழந்தது. இந்நிலையில் இரட்டை இலையை மீட்பதற்காகவும், கட்சியின் நலன் கருதியும் இரு அணிகளும் இணைவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும், ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகளில் விடாபிடியாக இருந்தார் ஓபிஎஸ்.
துணை முதல்வர்
அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது பதவி பிரமாணம் செய்து வைத்து அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ்- எடப்பாடி ஆகியோரின் இரு கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து இரு அணிகளையும் இணைந்துவிட்டார் என்பது ஆளுநரின் செயல்பாட்டிலேயே தெரிகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும் தமிழக பாஜக தலைவர்கள் இதை மறுத்துவந்தனர். அதுபோல் அதிமுக நிர்வாகிகளும் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியில் மட்டுமே இணக்கமாக இருந்து வருகிறோம் என்றே கூறினர்.
பிரதமர்தான் காரணம்
தேனியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த விழா ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் அதிமுகவின் இரு அணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கட்டாயப்படுத்தியதால்தான் ஒன்றிணைந்தது என்றும் அதிமுகவின் அணிகள் இணைந்தாலும் அதில் நான் அமைச்சரவையில் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகவும் அதற்கு மோடி நீங்கள் கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுகவில் புகைச்சல்
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கருத்தால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நலனுக்காக ஒன்றிணைகிறோம் என்று கூறிய ஓபிஎஸ் தற்போது பிரதமர் பஞ்சாயத்து செய்துதான் ஒன்றிணைந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
|
டுவிட்டரில் எஸ்வி சேகர் கருத்து
அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்து இடம்பெற்றுள்ள செய்தியை மேற்கோள்காட்டிய எஸ்வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் "ஓபிஎஸ் எடப்பாடி இணைப்பு" மோடி அவர்கள் கட்டாயப்படுத்தினாரா? அல்லது மோடி பெயரை பயன்படுத்தி யாராவது இடைத்தரகர் கட்டாயப்படுத்தினாரா? ஓபிஎஸ் உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. காலம் வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.