பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாரதிராஜா ஆவேசம்
சென்னை: பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
சென்னையில் பாரதிராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு நரி கொஞ்ச நாளாக ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது. இன்னொரு நரியும் இப்போது குரைக்கிறது. அந்த இருவர் பெயர்களை சொல்ல நா கூசுகிறது.
பழைய தமிழகமாக இருந்திருந்தால் இப்போது இவர்கள் நிலைமையே வேறு. இப்போது கொஞ்சம் கண்ணியம் காக்க வேண்டியிருப்பதால், தாய்மார்கள் அமைதியாக உள்ளனர். நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள்.
யாரை பழிப்பது? நீ அங்க கை வச்சி, இங்க கை வச்சி எங்க வச்சிருக்க இப்போ?. நீ கை வைத்துள்ளது தீக்குச்சி மேல். கை வைக்க கூடாத இடம். இது பற்றி எரியும். பத்திரிகையாளர்கள் நினைத்தால் உங்களை தவிடுபொடியாக்கிவிடுவார்கள். அதிலும் தாய்மார்கள்.
நாளை ஒரு வங்கியில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி எப்படி இந்த பதவிக்கு வந்துள்ளார் என்றும் கேட்பீர்களா? அரசு அதிகாரத்தில் பெரிய பதவியில் இருக்கும் பெண்ணையும் அப்படி சொல்வீர்களா? நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். காவிரி, கங்கை தாய் என்போம். தாய் பூமி என்பது எங்கள் கலாச்சாரம்.
பெண்களை வேலைக்கு அனுப்புவதே அரிதாக இருந்த காலத்தில், பாரதி ஆரம்பித்து வைத்த மதிப்பு, இப்போது பெண்கள் சரிக்கு சமமாக ஓங்கி உயர்ந்துள்ளனர். அவர்களை அசிங்கப்படுத்துவது எவ்வளவு கேவலமான விஷயம். ஊடகங்கள் மீதும் தப்பு உள்ளது. இந்த முகங்களை ஊடகங்களில் காட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள்.உங்கள் முகங்களிலேயே அவர்கள் கரி பூசிவிட்டனர்.
ஊடகங்களில் 4வது தலைமுறையை நான் பார்க்கிறேன். பெண்கள் சரிக்கு சமமாக கேள்வி கேட்பது. வீடியோ எடுப்பது இதையெல்லாம் பார்த்து நான் வியந்துள்ளேன்.
ஆனால், இவர், அரசியல் வாழ்க்கையில் தாவி தாவி பிழைப்பு நடத்தியவர். பிரஸ் கிளப்புக்கு வா. எங்கள் பத்திரிகை சகோதர, சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.