பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை.. எந்த பாதிப்பும் இல்லை.. எஸ்வி சேகரே சொல்லிட்டாரு!
திருக்கடையூர்: பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை என்றும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து திருக்கடையூரில் பத்திரிகையாளர்களை எஸ்வி சேகர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக பாஜக தலைவர் நியமனத்திற்கான பெயர் பட்டியலில் எனது பெயரும் உண்டு.
என்னை தமிழக பாஜக தலைவராக நியமித்தால் நான் சிறப்பாக செயல்படுவேன். ஜாதி அரசியல் செய்ய மாட்டேன். தமிழகத்தில் மோடியின் புதிய திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டனர்.
தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்
எந்த பாதிப்பும் இல்லை
1970-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் இருந்த முஸ்லீம்களுக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லை.
அதிசயம்
முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது. அதனால் நாட்டில் மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்தனர். தற்போது நீதி போதனை வகுப்பு இல்லாததால் ஒழுக்கம் கெட்டு விட்டது. 2021-ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வரும் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றார்.
பட்டியல்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவி காலியாக இருக்கிறது. தமிழக பாஜக தலைவருக்கான ரேஸில் எச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், வானதி சீனிவாசன், குப்புராமு ஆகியோரின் பெயர்கள் இருந்தன.
பாஜகவில் சலசலப்பு
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பாஜக தலைவருக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராமு நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் தனது பெயரும் லிஸ்டில் இருப்பதாகவும் தலைவர் பதவி தனக்கு வழங்கினால் எப்படி செயல்படுவார் என்பது குறித்தும் எஸ் வி சேகர் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.