3 வாரமாக ஓட்டம்.. விடாமல் துரத்தும் சட்டம்.. தப்ப வழியே இல்லை.. சரணடைகிறார் எஸ்.வி.சேகர்?
எஸ்வி சேகர் சரணடைய வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை: உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து வேற வழியே இல்லாமல் பாஜகவின் எஸ்.வி.சேகரை சரணடைய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் பதிவை சமூக வலைதளங்களில் பாஜகவின் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து கைதுக்கு பயந்து கடந்த 3 வாரங்களாக எஸ்.வி. சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், கடும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தார்.
இதனால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் அரசு தரப்பு ஆலோசனை நடத்தியிருக்கிறது.
இதில், நீதிமன்றத்தின் கெடுபிடி அதிகமாகிவிட்டது. இதனால் அரசுக்கு நெருக்கடி உருவாகிறது. எஸ்.வி.சேகர் உடனே சரணடைவதுதான் சரியாக இருக்கும் என கிரிஜா வைத்தியநாதனிடன் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ, எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார்? என தமக்கு தெரியாது என நழுவியிருக்கிறார்.
தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையெனில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் சிக்கல் ஏற்படலாம். ஆகையால் வேறுவழியே இல்லாமல் எஸ்.வி.சேகர் சரணடைய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.