ஊழியர்களின் அஜாக்கிரதை... ஏற்காடு எக்ஸ்பிரஸில் ‘எஸ் 3’ பெட்டி மிஸ்ஸிங்... பயணிகள் தவிப்பு !
ஈரோடு : ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஊழியர்களின் அஜாக்கிரதையால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்று மாட்டப்படவில்லை. இதனால், பயணிகள் அப்பெட்டியைத் தேடி பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 10-40 மணிக்கு சென்னையில இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும். முன்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்று அழைக்கப்பட்ட இந்த ரயில் இப்போது அதன் வேகத்தை அதிகரித்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட்டு உள்ளது.
இதனால் முன்பு 6.50 ஈரோட்டுக்கு வந்த இந்த ரெயில் இப்போது அதிகாலை 5-50 மணிக்கே வந்தடைகிறது. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. வழக்கமாக இந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழக்கமாக 11 பெட்டிகள் மாட்டப்பட்டு இருக்கும். கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதலாக 2 பெட்டிகள் வரை மாட்டப்படும். இதில் ஒரு பெட்டி பெண்களுக்கும், ஒரு பெட்டி மாற்று திறனாளிகளுக்கும், 3 பெட்டிகள் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்றிரவு இந்த ரயில் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் தங்கள் பெட்டிகளில் ஏறி அமர்ந்த வண்ணம் இருந்தனர். ஆனால், 'எஸ் 3' பெட்டியில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மட்டும், தங்களது பெட்டியைத் தேடி அழைந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பெட்டியைக் காணாததால், இது தொடர்பாக டி.டி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்காடு ரயிலில் எஸ் 3 பெட்டி இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், ‘எஸ் 3' பெட்டி அவசர அவசரமாக மாட்டப்பட்டது.
இதுபற்றி விசாரித்த போது ‘‘எஸ் 3'' பெட்டியை ஊழியர்கள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்க மறந்தது தெரியவந்தது.
இதனால் 10.40 மணிக்கு புறப்படவேண்டிய அந்த ரயில் ஒரு மணி 10 நிமிடம் தாமதமாக 11.50 மணிக்கு புறப்பட்டது. இதன் காரணமாக தினமும் 5.50 மணிக்கு வரவேண்டிய இந்த ரெயில் இன்று காலை 2 மணிநேரம் தாமதமாக 7.50 மணிக்கே ஈரோடு வந்தது.
குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில் வராததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.