எம்பி சம்பள பணம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தான் எம்பியாக இருந்த காலத்தில் பெற்ற சம்பளம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கள் எம்பியாக பதவியில் இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் மற்றும் படிகள் என ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது.
தற்போது தான் எம்பியாக பதவியில் இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் மற்றும் படிகள் என முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
ரூ.90 லட்சம் சம்பளம்
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராஜ்யசபா எம்.பி. என்ற வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் மாதப்படிகள் அனைத்தையும் சேர்த்து சுமார் ரூ.90 லட்சம் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை அப்படியே பிரதமர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியுள்ளார்.
பிரதமர் நன்றி
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சச்சினின் இந்த நற்செயலுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இன்னலில் இருப்பவர்களுக்கு உதவ இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
185 திட்டங்களுக்கு நிதி
சச்சின் டெண்டுல்கர் தனது பதவிக் காலத்தில், பெரும்பாலான நேரங்களில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லையென்ற புகார் இருந்து வந்தது. இந்நிலையில் தனது எம்.பி. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.4 கோடி தொகையை பல்வேறு திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். சுமார் 185 திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் தத்தெடுப்பு
கல்வி மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக அவர் 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மேலும், மேலும் சன்சத் கிராம் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் ஆந்திராவில் உள்ள புத்தம் ராஜூ கந்திரிகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோஞ்சா கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.