சென்னை வந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சந்திப்பு
சென்னை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
சென்னையில் எம்.ஆர்.எப். பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின் நேற்று சென்னை வந்தார். பின்னர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அவரது இல்லத்திற்கு சென்று சச்சின் சந்தித்தார். அப்போது ஏ.ஆர். ரஹ்மானின் தாயாரும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும் விதம் குறித்து, சச்சின் நேரில் கண்டு ரசித்தார். சச்சினுக்கு சில ட்யூன்களை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து காண்பித்தார். சந்திப்பு முடிந்ததும், பேசிய சச்சின், தான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் என்றும், மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தாகவும் கூறினார்.
முன்னதாக எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். அப்போது வீரர்களுக்கு அவர் பல்வேறு நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது...
27 ஆண்டுகளாக வேகப்பந்து பயிற்சி அளிப்பதற்கு சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மட்டுமல்லாமல் முழு ஈடுபாடும் அவசியம்.
அதுதவிர சரியான நபர்களை கண்டறிந்து பயிற்சியளிப்பதும் முக்கியம். அந்த வகையில் டென்னிஸ் லில்லியை நிர்வாகம் கண்டறிந்தது. தற்போது கிளென் மெக்ராத் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை நான் விளையாடிய அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏதாவது ஒரு வகையில் எம்.ஆர்.எஃப். பயிற்சி மையத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள் என்று கூறினார். அப்போது சச்சினுடன் கிளென் மெக்ராத்தும் உடன் இருந்தார்.