”சகாயம் 2016”- இளைஞர்கள் தலைமையில் புற்றீசலாய் படையெடுக்கும் 90 வாட்ஸ் அப் குழுக்கள்!
சென்னை: மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் கிட்டதட்ட 90 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளனவாம்.
சகாயம் 2016 அமைப்பில் இதுவரை 1.5 லட்சம் இளைஞர்கள் மிஸ்டுகால் மூலமாக இணைந்திருக்கிறார்கள். இதற்காக இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்பு குழு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.
அதில் இணைந்துள்ள இளைஞர்கள், "சகாயம் 2016 அமைப்பில் 1.5 லட்சம் பேர் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே உள்ளது. 10 ஆயிரம் பேர் களத்தில் இறங்கி சகாயத்துக்காக பணியாற்ற துடிப்புடன் தயாராக இருக்கிறார்கள். இன்று மக்களை பாதிக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள் மூலம் தற்காலிகமாக தீர்வது போன்ற தோற்றமே ஏற்படுகிறது. நிரந்தர தீர்வு என்பது இல்லாமலேயே போய் விட்டது.
சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசியல் தலைமைக்கு வந்தால்தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பொதுமக்கள், இளைஞர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக 90 வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி வைத்துள்ளோம். இதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்து வருகிறது. சகாயத்துக்கு ஆதரவான கூட்டங்கள் பற்றியும் அதில் பதிவு செய்கிறோம்.
எங்களின் இதுபோன்ற முயற்சிகள் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. மதுரையில் 3 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பின்னர், அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். 2016 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர் சக்தி என்றால் என்ன என்பதை நிச்சயமாக நிரூபித்துக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.