கிரானைட், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரிக்க சகாயத்தை தேர்வு செய்தது ஏன்?: நீதிபதிகள் விளக்கம்
சென்னை: கிரானைட் முறைகேடு தொடர்பாக முதன் முதலில் அரசுக்கு அறிக்கை அளித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அளித்ததாலேயே அவரது தலைமையில் கிரானைட்- தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை குழு அமைக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு 2012-ம் ஆண்டு மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் ஒரு அறிக்கையை அனுப்பினார். சகாயத்தின் அறிக்கையின்படி, மதுரையில் மட்டும் கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றால் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சட்டவிரோத மணல், கல், கிரானைட் குவாரிகள் மூலம் பல லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும். இதனால் இந்த முறைகேடு குறித்து மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள், மணல், கல் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து ஆய்வு அறிக்கையை பெற்று அதன் மீது இந்த நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
முதன்மை பெஞ்ச் விசாரணை
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் காஜா மொய்தீன் ஹிஸ்தி, தமிழக அரசு சார்பில் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் ராஜாராம் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
பதில் தாக்கல் செய்யாத அரசு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சட்டவிரோத கிரானைட், மணல், கல் குவாரிகள் செயல்படுவதாக இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத குவாரிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயத்தை நியமிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி இடைக்கால மனுவையும் மனுதாரர் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால மனுவுக்கு இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
முறைகேடு உண்மைதான்
பிரதான மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த தொழில்துறை செயலாளர், முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் கடந்த 2012-ம் ஆண்டு மே 19 ந் தேதி அரசுக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு விதமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். மதுரையில் கிரானைட் குவாரிகள் முறைகேடாக செயல்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசு கொடுத்த நிலத்திலும்..
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக அரசு கொடுத்த விவசாய நிலத்தில்கூட கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் அந்த அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
முதலில் அறிக்கை அனுப்பிய சகாயம்
இந்த முறைகேடு குறித்து முதலில் ஆய்வு அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் என்பதால், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தகுந்த நபர் இவர்தான் என்று முடிவு செய்கிறோம்.
சகாயம் தலைமையில் குழு
இந்த வழக்கு விசாரணையின்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தற்போது அறிவியல் நகரத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமிக்கின்றோம். இவர் நேரடியாக அனைத்து வகை குவாரிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, எங்களுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.
அறிக்கைக்குப் பின் முடிவு
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரணைக்கு மாற்ற நாங்கள் விரும்பவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
2 மாதத்துக்குள் அறிக்கை
இந்த மேற்கொண்ட உத்தரவின் அடிப்படையில், இந்த இடைக்கால மனுவை முடித்து வைக்கிறோம். இன்றில் இருந்து 2 மாதத்துக்குள் தன்னுடைய ஆய்வு அறிக்கையை அதிகாரி சகாயம் தாக்கல் செய்யவேண்டும்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
மேலும், இந்த நீதிமன்ற உத்தரவின்படி குவாரிகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வழங்கவேண்டும். அதேபோல, மாநில வருவாய் நிர்வாகமும், ஆய்வு செய்ய நிர்வாக ரீதியான உதவிகளையும், தேவையான நிதியையும் வழங்கவேண்டும். இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகல், அறிவியல் நகரத்தின் துணை தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அரசு என்ன செய்யப் போகிறது?
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, சகாயம் தலைமையில் அரசு விசாரணை குழு அமைக்குமா? அல்லது உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யுமா? என்பதற்கான விடை ஓரிருநாட்களில் தெரிந்துவிடும்.