நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு... சகாயம் அறிவிப்பு
நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
சென்னை: அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனவேதனை
இதுகுறித்து சகாயம் ஐஏஎஸ் கூறுகையில், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். 2 நாட்களாக எனக்கு ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்லமுடியாதவை.
துப்பாக்கிச் சூடு
எண்ணி பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தின் இளம் பிள்ளைகள் 17 வயது, 22 வயது என இந்த தமிழ் சமூகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டிய பிள்ளைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
வருத்தம்
அடிப்படையில் நான் ஒரு சுதந்திர நாட்டினுடைய குடிமகன். என் நாட்டினுடைய சக குடிமக்களுடைய துயரத்திலும் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களுடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.
தார்மீக ஆதரவு
என்னை பொருத்தவரைக்கும் என் தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சகாயம் ஐஏஎஸ்.