முதல்வர் வேட்பாளர்கள்: ரஜினி, விஜய், அஜீத்தை தூக்கியடித்த சகாயம் ஐ.ஏ.எஸ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதுமுக முதல்வர் வேட்பாளர்களில் நடிகர்கள் ரஜினி, விஜய்,அஜீத் விட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பாமகவில் அன்புமணி ராமதாஸ், மக்கள் நலக்கூட்டணியில் வைகோ என பல முதல்வர் வேட்பாளர்கள் இருக்கின்றனர்.
சினிமா நடிகர்களில் சிலருக்கும் முதல்வராகவேண்டும் என்று ஆசையிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் முதல்வர் ஆசையுண்டு. எத்தனையோ முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை முதல்வராக ஒரு குழு முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக, லயோலா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடன், நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் வேட்பாளராக யாருக்கு ஆதரவு என்பது பற்றி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பல புதுமுகங்களுக்கும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் தனித்துப் போட்டியிட ஆதரவு பெருகியுள்ளது.
சகாயம் ஐ.ஏ.எஸ்
முதல்வர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி - அஜீத்
அதேபோல், நடிகர் ரஜினிக்கு 1.5 சதவீதம் பேரும், நடிகர் அஜித்திற்கு 0.2 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு 0.8 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தனித்து போட்டியிடுவார்களா?
36.54 சதவீதம் பேர் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 32.90 சதவீதம் பேர் திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மக்களின் நாடித்துடிப்பு
திருவாரூர், செஞ்சி, காட்பாடி, திண்டிவனம், ஆர்.கே. நகர், காட்டுமன்னார்கோயில், கோபிச்செட்டிபாளையம், ஆண்டிபட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், காட்டுமன்னார்கோயில், கரூர், ஆரணி, உடுமலை, அவினாசி, தென்காசி, கலசப்பாக்கம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திமுக தனித்துப் போட்டியிட பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எப்படிப்பட்ட தலைவர்
ஹிட்லரை போன்ற தலைவர் தேவை என 0.1 சதவீதம் பேரும், பழைய மன்னராட்சி முறைக்கு 0.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு 0.2சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
வெள்ள பாதிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளும் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேமுதிக - விசிக ஆதரவு
அதிமுக, திமுக தவிர்த்து தேமுதிகவின் பலம் பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தேமுதிக - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணிக்கு 0.80 சதவிகிதமும், தேமுதிக + விடுதலை சிறுத்தைகள் + காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கு 0.70 சதவிகித ஆதரவும் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தேமுதிக + விசிக + மதிமுக கூட்டணிக்கு 0.30 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேமுதிக - பாஜக கூட்டணி
எங்கள் அணியில்தான் தேமுதிக இருக்கிறது என்று பாஜக கூறி வருகிறது. தேமுதிக அதை மறுக்கவும் இல்லை உறுதிபடுத்தவும் இல்லை. இந்த நிலையில் தேமுதிக + பாஜக கூட்டணிக்கு 2.08 சதவிகித மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
மதிமுக - விசிக
மதிமுகவின் பலத்தை பார்த்தோமானால் மதிமுக உடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு 0.50 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுக + விசிக + கம்யூனிஸ்டுகள் இணைந்த மக்கள் நலக்கூட்டணிக்கு 0.93 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜி.கே.வாசன் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து ஜி.கே.வாசன் இணையும் பட்சத்தில் 0.42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுக + பாமக + பாஜக கூட்டணிக்கு 0.42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.