சென்னை மெரீனா புரட்சியில் கை கோர்த்த சகாயம் ஐஏஎஸ்! மாணவர்கள் உற்சாக வரவேற்பு! #SaveJallikattu
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சியில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொங்கல் பண்டிகை நாளில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சாதாரண போராட்டமாக தொடங்கி இப்போது அமைதிப்புரட்சியாக வெடித்துள்ளது. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு இந்த போராட்ட களத்தில் இடமில்லை. மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்று மிகப்பெரிய வேள்வியை மெரீனாவில் நடத்தி வருகின்றனர்.
மெரீனா போராட்டம் உலக மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதரவு தெரிவித்துள்ளார். மெரீனா கடற்கரைக்கு சென்று இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அரசியல்வாதிகளை புறக்கணித்த போராட்டக்குழுவினர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு வரவேற்பு அளித்தனர். பலரும் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பொங்கல் திருநாளன்று நாமக்கல்லில் பேசிய சகாயம் ஐஏஎஸ், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நம் தமிழ் மண்ணில் அரங்கேறியிருப்பதாகவும், இது மரபுகளின் தொடர்ச்சி என்று கூறினார்.
எனவே கலாசாரத்தின் வெளிப்பாடான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய சகாயம் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமையன்று மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.