பி.ஆர்.பி பேரில் பினாமி கிரானைட் குவாரிகள்?- விசாரணை நடத்த மதுரை எஸ்.பிக்கு சகாயம் உத்தரவு
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. பெயரில் பினாமி நிறுவனங்கள் இருப்பதாக எழுந்துள்ள புகாரில் விசாரணை நடத்துமாறு எஸ்.பி.க்கு சகாயம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மணலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர், "நான் சமூக பிரச்சினைக்காக போராடி வருகிறேன். மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகள் செய்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ஏராளமான வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் பல்வேறு பினாமி நிறுவனங்கள் பெயரிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை பி.ஆர்.பி. நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை வரிச்சியூரில் ஹரிகர் ராக் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமும் பி.ஆர்.பி. நிறுவனத்தின் பினாமி நிறுவனம் ஆகும்.
இந்த பினாமி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து ரசீது இல்லாமல் ஏராளமான கிரானைட் கற்களை விற்பனை செய்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை பொதுமக்கள் நலன் கருதி விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது எஸ்.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.