3வது கட்ட விசாரணையை துவக்கினார் சகாயம்... என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகிறதோ!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான மூன்றாவது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது சகாயம் விசாரணைக் குழு.
மதுரை அருகே மேலூர், கீழவளவு உள்பட பல பகுதிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பலர் கைதானார்கள்.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்படி, கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.
தனது முதல் கட்ட விசாரணையை கடந்த 3-ந்தேதி சகாயம் தொடங்கி, 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கிரானைட் அதிபர்கள் தங்களை மிரட்டி நிலங்களைப் பறித்ததாகவும், இதனால் விவசாயத் தொழிலை இழந்து வாடுவதாகவும் மக்கள் கண்ணீருடன் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட விசாரணையை சகாயம் கடந்த 15-ந்தேதி தொடங்கினார். 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பொதுமக்கள் மட்டும் அல்லாமல், போலீஸ்காரர்களும் புகார்கள் தெரிவித்தனர். மேலும், கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளுக்கு சகாயம் தனது குழுவினருடன் சென்று விசாரணை நடத்தினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து விசாரணை நடத்தி வந்த சகாயத்திற்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை மிரட்டலை தொடர்ந்து சகாயத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ஹைகோர்ட்டில் விசாரணைக் குழு மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி, தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம் வழங்கிய ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், இன்று தனது 3வது கட்ட விசாரணையை சகாயம் தொடங்கியுள்ளார். இதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.