என் பெயரில் மோசடி செய்தால் உடனே புகார் கொடுங்கள் - சகாயம் ஐ.ஏ.எஸ்
மதுரை: தன்னுடைய பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் சகாயம் ஐஏஎஸ்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த ஜோதிபாசு என்பவர் ஒரு மனு கொடுத்து இருந்தார். அதில் "ஈரோட்டை சேர்ந்த பிலிப்ராஜா என்பவர் மதுரை இடையபட்டி அருகில் உள்ள கிரானைட் குவாரியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 88 லாரிகளை அபராதம் செலுத்தி மீட்டு தருவதாக கூறினார். உங்களுடன் நல்ல பழக்கம் இருப்பதாக கூறி ரூபாய் 61 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட சகாயம், அதனை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். அதன்படி திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சகாயம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோட்டை சேர்ந்த பிலிப்ராஜா என்பவர் எனது பெயரை பயன்படுத்தி 61 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக என்னிடம் திருப்பூரை சேர்ந்தவர்கள் புகார் செய்திருந்தனர். அந்த பிலிப்ராஜா கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடன் அவர் இருப்பது போன்று ஒரு போட்டோவை தயார் செய்து இருக்கிறார்.
மேலும் செல்போனில் என் குரலை போல ஒலிப்பதிவு செய்தும் ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. அதுதவிர, போலி ஆவணங்களை தயாரித்து அதில் அரசு முத்திரைகளை பதித்து உள்ளார். இப்படி பல வழிகளில் அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் சட்ட ஆணையத்திலோ அல்லது கனிமவள அலுவலகங்களிலோ லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறதா? அதனை சட்ட ஆணையர் விடுவிக்கப் போகிறாரா? என்று மனுதாரர் ஆராயாமல் விட்டது துரதிருஷ்டவசமானது.
இந்த சட்ட ஆணையத்தை பொறுத்தவரை எல்லாம் சட்டப்படி தான் நடக்கும். அணுவளவு கூட சட்டத்திற்கு புறம்பாகவோ, விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் நடக்காது. தெரிந்தவர் என்றோ, உறவினர் என்றோ, யாருக்கும் எந்த சலுகையும் இங்கு காட்டப்பட மாட்டாது. இதனை என் பெயரையோ, சட்ட ஆணையத்தின் பெயரையோ எவராவது பயன்படுத்தி உங்களை அணுகினால் உடனடியாக இந்த ஆணைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் குறித்த தகவலை தெரிவித்தால் இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளை சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.