கிரானைட் கொள்ளையால் ரூ.1.06 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு: அதிர வைத்த சகாயம் அறிக்கை
சென்னை: மதுரை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
இந்த முறைகேட்டில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல. 20 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்களும், அதிகார மட்டத்தில் இருந்தவர்களும், அதிகாரிகளும் இணைந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
கிரானைட் கொள்ளைக்கு யார் யார் உடந்தை என்று சகாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவும், சிறப்பு புலனாய்வு குழு, மத்திய புலானாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவும் சகாயம் குழு பரிந்துரை செய்துள்ளது.
சகாயம் கடிதம்
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளால் அரசுக்கு 16ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை அனுப்பினார் அப்போதைய ஆட்சியர் சகாயம். இந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012 மே மாதம் 19ம் தேதி சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு ஆட்சியராக அன்சுல்மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
அதிரடி நடவடிக்கை
சகாயம் அறிக்கை ஊடகங்களில் பூதாகரமாக்கப்பட, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் 16 குழுக்களை அமைத்தது அரசு. அவரும் 18 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு என அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டிராபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஏராளமான கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளிலும் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக பலர் வெட்டி எடுத்துள்ளனர். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சகாயம் ஐஏஎஸ் தலைமையில் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உத்தவிட்டனர்.
21 கட்ட விசாரணை
உயர்நீதிமன்ற உத்தரவின் படி சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல் அக்டோபர் 9ம், தேதி 2015 வரை 21 கட்டமாக விசாரணை நடத்தியது.
மாயமான இயற்கை வளங்கள்
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு கடந்த 20 வருடங்களாக கிரானைட் கற்களைக் கொள்ளையடித்ததால், அங்குள்ள குன்றுகள் காணாமல் போயின. கண்மாய்கள் இடந்தெரியாமல் அழிக்கப்பட்டன. தொல்லியல் சான்றுகள் போன இடம் தெரியவில்லை. தினம் தினம் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அறிக்கை தாக்கல்
கடந்த 23ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, சகாயம் தரப்பு வக்கீல் சுரேஷ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். 600 பக்கங்கள் கொண்டது அறிக்கையும், விசாரணை தொடர்பான 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களும், அதற்கான சிடி ஆதாரங்களும் அறிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு
கிரனைட் முறைகேட்டில் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட கிரனைட் கற்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு சி பி ஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் எனவும் ,இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22 பரிந்துரைகள்
கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி
நிறுவனம் (என்எல்சி) போன்ற பொதுத்துறை நிறுவனம் போல தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) செயல்பட
வேண்டும். கிரானைட் குவாரி பணியாளர்களை தமிழ்நாடு கனிம நிறுவனமே நியமிக்க வேண்டும்' என்பது உட்பட 22
பரிந்துரைகளை சகாயம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
20 ஆண்டுகால முறைகேடு
கிரானைட் குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் அளிப்பது முதல் கற்கள் வெட்டி எடுப்பது வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள சகாயம், குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது, உள்ளூர் அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகளும், ஆளும் அரசியல் கட்சியினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
அனைவரையும் விசாரியுங்கள்
இந்த ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பெயருடன் பட்டியலை அளித்துள்ள சகாயம் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளார். அறிக்கை அளித்த சகாயம் அமைதியாக இருக்கிறார்... அவரது அறிக்கையில் உள்ள பரிந்துரைகள்தான் அதிரவைக்கின்றன. சகாயத்தின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவார்களா? பார்க்கலாம்.