இனி ஒரு விதி செய்வோம்... சகாயம் ஆதரவாளர்கள் பிரச்சாரம்!
சென்னை: சகாயம் ஐஏஎஸ்-ன் ஆதரவாளர்களான எழுச்சி தமிழகம் சார்பில் சென்னையின் பல இடங்களில் கண்ணியமான தேர்தலை வலியுறுத்தி பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
நேர்மைக்குப் பெயர் போன ஐஏஎஸ் அதிகாரியான சகாயத்தை, தமிழகத்தின் அடுத்த முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது ஆதரவாளர்கள் எழுச்சி தமிழகம் என்ற இயக்கத்தை நடத்தி வருகின்றனர். சகாயத்திற்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் அனைத்தையும் இணைத்து, இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் கண்ணியத்தோடு வாக்களிக்க வலியுறுத்தி சென்னை அசோக் நகா், ஜாபர்க்ஹன் பேட்டை, சைதை பேட்டை பகுதியில் எழுச்சி தமிழகம் இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது.
கடந்த ஞாயிறன்று நடந்த இந்தப் பிரச்சாரத்தில் வாக்களர்கள் அனைவரும் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், எந்த அரசியல் கட்சியிடமும் காசு வாங்காமல் கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
இந்த நோட்டீஸில் ஒருபுறம் சகாயத்தின் படமும், மற்றொரு புறம் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் படமும் இடம்பெற்றுள்ளது.