மலை விழுங்கி மகாதேவன்கள்… கிரானைட் கொள்ளையர்களின் அட்டகாசங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி
மதுரை: காடு, கண்மாய், குளங்களை அழித்த கிரானைட் கொள்ளையர்கள், அழகும் கம்பீரமும் நிறைந்த பொக்கிஷ மலையையே அழித்துவிட்டனர். மக்கள் அளித்த புகாரின் பேரில் அந்த பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற சகாயத்திற்கு பாதியாக வெட்டப்பட்ட மலைதான் கண்ணுக்கு சிக்கியுள்ளது.
மலையில் இருந்த விலை உயர்ந்த காஷ்மீர் வெள்ளை கிரானைட் கற்களுக்காக 35 ஏக்கர் அளவிற்கு மலையை வெட்டி அழித்துவிட்டனர். பெயருக்கு ஏற்றார்போலவே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை தன்னுள் கொண்டிருக்கும் அந்த மலை படிப்படியாக அழிக்கப்பட்டது பற்றி சகாயத்திடம் கண்ணீர் மல்க கதை கதையாக தெரிவித்துள்ளனர் பொதுமக்கள்.
பொக்கிஷ மலை மற்றும் டாமின் குவாரிகளில் பல லட்சம் கியூபிக் மீட்டர் அளவில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து பதுக்கி வைத்திருந்த குவாரி அதிபர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் அதிகாரி சகாயத்திற்கு உச்சபட்ச அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 3ஆம் கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய சகாயம் மனுக்களை பெற்றார். சனிக்கிழமையன்று கள ஆய்விற்காக கீழவளவு பொக்கிஷ மலை பகுதிக்கு சென்ற சகாயத்தை வரவேற்றது பாதியாக வெட்டப்பட்ட மலைதான். இந்த மலையை சுற்றிலும் கிரானைட் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன.
71 ஏக்கரில் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட அழகான தோற்றம் கொண்டது பொக்கிஷ மலை. 1993 முதல் 20 ஆண்டுகளுக்கு பிஆர்பியின் உறவினர் டாமினில் ஒப்பந்தம் செய்து இந்த மலையில் 3.81 லட்சம் கியூபிக் மீட்டருக்கும் மேல் கற்களை வெட்டியுள்ளனர்.
தர்ஹா, கோயில் அழிப்பு
பதினெட்டு கிராமத்தினரும் சென்று வரும் இந்த மலைக்கு மேல் உள்ள சர்க்கரைபீர் தர்ஹா, கரைய கருப்பன் கோயிலுக்கான பாதை அழிக்கப்பட்டுவிட்டன.
கண் முன் கரைந்த மலை
1993களில் அழகாக கம்பீரமாக இருந்த மலை படிப்படியாக வெட்டி சிதைக்கப்பட்டது என்கின்றனர் கிராம மக்கள். கண்முன்னே எங்களின் பொக்கிஷம் அழிவதைக்கண்டு நாங்கள் மனு கொடுத்ததால் போலீஸார் கைது செய்தனர் என்றும் ஆய்விற்கு சென்ற சகாயத்திடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் துணையோடுதான் இந்த மலை அழிக்கப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாக தலையாரிக்கு ரூ.ஆயிரம், விஏஓவுக்கு ரூ.5 ஆயிரம், வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் என மாதந்தோறும் குவாரி அதிபர்கள் கப்பம் கட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், காவல் துறையில் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் வரை அனைவருக்கும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது எனவேதான் குவாரி அதிபர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றனர் என கீழவளவு பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம் உட்பட பலரும் சகாயத்திடம் புகார் தெரிவித்தனர்.
கண்மாயில் கழிவுகள்
பல்லவா கிரானைட் நிறுவனத்தினர், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 47 ஏக்கர் சிரமாணிக்கம் கண்மாயில் கழிவுக் கற்களை கொட்டி முற்றிலும் அழித்திருந்தனர். இதனால் பல கண்மாய்களுக்கு 5 ஆண்டுகளாக தண்ணீரே செல்லாமல் பல நூறு ஏக்கர் பாசன நிலம் தரிசாகிவிட்டது.
ஆவணங்கள் மாற்றம்
இந்த அத்துமீறலை கண்டு கொள்ளாத அதிகாரிகள், முறைகேடுகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு சாதகமான முறையில் கற்களை கொட்டிய இடத்தை குவாரி தரிசு, பாறை பகுதி, கல் பகுதி என ஆவணங்களில் மாற்றியிருக்கின்றனர் அதிகாரிகள்.
ஏன் இப்படி விதிமீறலுக்கு அனுமதிக்கப்பட்டது என அதிகாரிகளிடம் சகாயம் கேட்டதற்கு மவுனம் மட்டுமே பதிலாக கிடைத்துள்ளது. விதிமீறல்குறித்து சான்றிதழாக அளிக்க வேண்டும். வேறு புகார்களை மக்கள் அளித்தால் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய சகாயம் குடியிருப்பு பகுதிகளுக்க ஆய்வுக்கு சென்றார்.
குடியிருப்பு பகுதியில்
கீழவளவு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில், 200 அடி பள்ளம் தோண்டி கற்கள் வெட்டப்பட்டிருந்தன. குறிப்பிட்ட இடம் கிராம நத்தமாக இருந்தது. இதுபோன்று இருந்தால் அங்கு மக்கள் வீடுகளை கட்ட பட்டா வழங்க வேண்டும். இதை அழித்து பிஆர்பி நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டியுள்ளது தெரியவந்தது. ஆய்வின் இடையிடையே பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், பல்வேறு துறை அதிகாரிகள் புகார்கள் அளித்தனர்.
விரட்டிய குவாரி அதிபர்கள்
குடியிருந்த வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டிய குவாரி அதிபர்கள், காலி செய்ய மறுத்தவர்களின் வீடுகளின் கற்களை கொட்டியும் அச்சுறுத்தி விரட்டியுள்ளனர். சொந்த வீடுகளை இழந்து வேறு பகுதிகளுக்கு விரட்டப்பட்டோம் என்றும் சகாயத்திடம் பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த விதிமீறல் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆர்டிஓ. செந்தில்குமாரிக்கு சகாயம் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மீது புகார்
கீழவளவு பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பிஆர்பி நிறுவனம் வாங்கி குவித்துள்ளது. இந்த இடத்தில் குவாரி நடத்த அனுமதி பெற்றும் இதுவரை தோண்டவே இல்லை. ஆனால் அரசு நிலம், மலைகள், கண்மாய்கள், பாதை, மயானம், கால்வாய் என சிக்கிய இடங்களில் எல்லாம் கற்களை வெட்டி தங்கள் இடத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இப்படி அனைத்து முறைகேடுகளுக்கும் வருவாய், டாமின், கனிமவளம், காவல்துறை என அனைத்து துறையினரும் போட்டி போட்டு உதவியது ஆய்வில் தெரியவந்தது.
திகில் முகங்களோடு அதிகாரிகள்
ஆய்விற்கு சென்ற சகாயத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்ஸ் தலைமையில் 100 போலீஸார் பாதுகாப்புக்கு வந்தனர். கோட்டாட்சியர் செந்தில்குமாரி, கனிமவளத் துறை உதவி ஆணையர் ஆறுமுகநயினார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், தாசில்தார் மணிமாறன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் சகாயத்துடன் சென்றனர். கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து சகாயம் தோண்ட தோண்ட திகில் முகங்களோடு அதிகாரிகள் வலம் வந்தனர். இன்னும் இரண்டு தினங்களுக்கு நேரடி ஆய்வு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.