கண்மாய் இங்க இருக்கு கரை எங்கே? களத்தில் கலக்கும் சகாயம்: கலங்கும் அதிகாரிகள்
மதுரை: கண்மாய்கள், குளங்கள், விவசாய விளைநிலங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டனர் கிரானைட் குவாரி முதலைகள். "ஐயா கிணத்தை காணோம்" என்று வடிவேலு சொன்னது போல நூற்றுக்கணக்கான புகார்கள் குவியவே, அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்த சட்ட ஆணையர் சகாயம் இன்று நேரடியாக களத்தில் இறங்கினார்.
முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிக அளவில் புகார்கள் குவியவே, கண்மாய், குளங்கள் அபகரிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் அங்கே அதிகாரிகள் "அதாங்க இது..." என்று செந்திலின் வாழைப்பழ காமெடி போல பதில் கூறியுள்ளனர்.
கண்மாய் இங்கே இருந்தா கரை இருக்கணுமே அது எங்கே என்று அதிகாரிகளிடம் சகாயம் கேட்கவே, நீங்க நிக்கிற இடம்தான் கரை என்று அவர்கள் பதிலளித்து அதிர்ச்சியளித்துள்ளனர். ஆனால் அசராமல் களத்தில் கலக்கும் சகாயம் அதிகாரிகளிடம் போட்ட கிடுக்கிப்பிடியில் ஆடித்தான் போய்விட்டார்களாம்.
சமணர் படுகையில் ஆய்வு
கிரானைட் முறைகேடு தொடர்பாக முதன் முறையாக நேரடியாக களத்தில் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இன்று மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் திருவாதவூர் என்ற ஊரில் சமணர் படுகையில் உள்ள ஓவா மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிராம எழுத்து கல்வெட்டுக்கள்
இந்தியாவில் 8 இடங்களில்தான் சமணர் படுகைக் கொண்ட மலை இருக்கிறது. அதில் ஒன்று இங்கிருக்கும் 'ஓவாமலை'. இந்த மலையில் பிராமி எழுத்து கொண்ட கல்வெட்டு இருக்கிறது. மற்ற இடங்களில் இந்த கல்வெட்டு இயற்கை சீற்றத்தால் சிதைந்து இருக்கிறது. ஆனால் இந்த கல்வெட்டு அப்படியே இருக்கிறது.
நெல் விவசாயம்
மலை அருகில் மேலசுனை, கீழசுனை என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் ஆதிகாலம் முதல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த இடத்தில் முறைகேடாக குவாரி இயங்கி வந்தது. அந்த பகுதிக்கு சென்ற சகாயம், அங்குள்ள பொதுமக்களிடம் அதிகாரிகளிடமும், குளம், கண்மாய், ஆயக்கட்டு பற்றிய விவரங்களை கேட்டு விசாரித்தார்.
குளம் இருக்கு கரை எங்கே?
குளம் ஒன்று இருந்து இருந்தால் கரை என்று ஒன்று இருந்திருக்குமே. எங்கே கரை இருக்கிறது? என்று அருகில் இருந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டார் சகாயம்.
கரை கரைஞ்சிருச்சே
அதற்கு பதில் அளிக்க முடியாமல் யோசித்த அதிகாரிகள், நீங்கள் நிற்கும் இடம்தான் கரை என்று கூறினர். அதிர்ச்சியான சகாயம், அப்படியென்றால் கரை கரைந்துவிட்டதா? என்று பதிலுக்கு கேட்டு அதிகாரிகளை திணறடித்தாராம்.
ஓட முடியலையே
நேரடியாக களமிறங்கியுள்ள சகாயம் சேறு, சகதி என்று பாராமல் நடப்பதால் உடன் செல்லும் அதிகாரிகள் அவருடன் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்களாம். அந்த திணறலோடு அவர் கேட்கும் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லையாம்.
25 கேள்விகள்
சகாயம் விசாரணையில் முக்கிய அம்சமாக 25 கேள்விகள் அடங்கிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாய நிலம், கோயில்கள், பொதுமக்கள் வாழும் இடம் என அந்தந்த இடங்களுக்கு தக்கப்படி கேள்விகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேள்விகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குரிய பதில் பெறப்படுகிறது. ஒருகேள்விக்கே பதில் சொல்ல முடியலையே... 25 கேள்விகளுக்கு எப்படி பதில்சொல்வது என்று யோசிக்கிறார்களாம் அதிகாரிகள்.