கிரானைட் முறைகேடு வழக்கில் எனது நேர்மையை சந்தேகிப்பதா? சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை
சென்னை: கிரானைட் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை சந்தேகிப்பது, எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு சமமானது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த குழுவில் ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் பணியாற்றினார். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பளத்தை அவருக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கவில்லை. இதுகுறித்து சகாயம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், இந்த குழுவுக்காக தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ.58 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இப்போது ரூ.5 லட்சம் கூடுதலாக சம்பளம் கேட்கிறார்கள். தாசில்தார் மீனாட்சி சுந்தரம் ஓய்வு பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் கிரானைட் அதிபர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்ததுடன் சகாயம் குழுவின் பணி முடிந்து விட்டது. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதில் உண்மை இல்லை என்று வாதாடினார். இதற்கு பதிலளித்த சகாயம், எனது விசாரணை அறிக்கையை சந்தேகிப்பது, எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு சமம் என்றார்.
இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், தாசில்தாருக்கு ஊதியம் வழங்காதது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு விசாரிப்பதாக ஒத்தி வைத்தனர்.