நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.. என்ன வம்பிக்கிழுக்காதீங்க.. சைதை துரைசாமி டென்ஷன்!
அமைப்பு செயலாளர் பதவியே வேண்டாம் என்று கடிதம் எழுதிய என்னை அப்பதவியிலிருந்து நீக்கும் தினகரனின் செயல்பாட்டுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
சென்னை: சசிகலா வழங்கிய அமைப்பு செயலாளர் பதவியே வேண்டாம் என்று கடிதம் எழுதிய என்னை அப்பதவியிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்திருப்பது என்னை வம்பிழுக்கும் செயல் என்று அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமி தெரிவித்தார்.
அதிமுக இணைப்புக்கு பின்னர் சசிகலாவை நீக்குவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தரப்பினர் தனித்து செயல்படுகின்றனர். அவர் தரப்பு ஆதரவாளர்கள் முதல்வருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில் தினகரன் தற்போது எடப்பாடி ஆதரவாளர்களை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர் தரப்பு ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன் சைதை துரைசாமியை அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்.
கட்சியில் இல்லை
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நான் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் கட்சியில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு கல்வி வழங்கும் விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.
வேண்டாம் என்று மறுத்தேன்
அமைப்பு செயலாளராக என்னை சசிகலா நியமித்த போது அப்பதவியை ஏற்க மறுத்து அவருக்கு கடிதம் எழுதிவிட்டேன். இந்நிலையில் நான் ஏற்காத பதவியிலிருந்து என்னை நீக்குவதாக கூறி என்னை தினகரன் வம்பிழுக்கிறார்.
நடுநிலைவாதி
நான் விரும்பியது ஒன்றிணைந்த அதிமுக மட்டுமே. எந்த அணியையும் சாராதவன் நான். எடப்பாடியும், ஓபிஎஸ் தரப்பும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது. தினகரன் யார், கடந்த 10 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார். அவருக்கும் அதிமுகவுக்கு என்ன தொடர்பு உள்ளது.
மன்னிப்பு கடிதம்
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் தற்போது கட்சியில் முரண்பட்ட செயல்பாடுகளை செய்து வருகிறார். சசிகலா மற்றும் அவர் சார்ந்தவர்களை ஜெயலலிதா கடந்த 2011-இல் நீக்கம் செய்தார். ஆனால் கடந்த 2012-இல் ஜெயலலிதாவை சந்தித்த சசிகலா மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்தார்.
குடும்பத்தினருடன் தொடர்புகள் துண்டிப்பு
அந்த கடிதத்தில் "நான் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆசைப்படவில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள். என் குடும்பத்தினருடனான தொடர்புகளை துண்டித்து விட்டேன்.
பொது வாழ்க்கை வேண்டாம்
நான் பொது வாழ்க்கையில் ஈடுபட விரும்பவில்லை. அக்காவுக்கு உதவியாளராக இருக்கவே விரும்புகிறேன். உங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து விடுகிறேன். என்றும் உங்களின் அன்பு தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் " என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் சசிகலா.
வம்பிழுக்காதீர்
இப்போது சொல்லுங்கள் யார் துரோகி. கடந்த 8 மாதங்களாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் உள்ள என்னை வம்பிழுக்க வேண்டாம் என்று சைதை துரைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.