ஏக்கத்துடன் காத்திருந்த சைதை துரைசாமிக்கு பெப்பே... கொட்டாவி விட்ட கோகுல இந்திரா, வளர்மதிக்கும் நோ!
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
மாஜி அமைச்சர்களான வளர்மதி, கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் தோற்ற நூர்ஜஹான் ஆகியோர் சென்னை மேயர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்ற தகவல்கள் சில தினங்களாக வெளியானது. ஆயிரம் விளக்கு அல்லது ஆர்.கே.நகர் வார்டுகளில் போட்டியிட வளர்மதியும், அண்ணா நகர் பகுதியில் போட்டியிட கோகுல இந்திரா முயற்சி செய்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் சென்னைக்கான வேட்பாளர் பட்டியலில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
சென்னை மாநகராட்சியின் தற்போதைய மேயர் சைதை துரைசாமி, நத்தம் விஸ்வநாதனுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பதால் அதிமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்திற்கு சரியான நடவடிக்கைகளை சைதை துரைசாமி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அண்ணாநகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா தேர்தலில் தோல்வியை தழுவினார். இதற்குக் காரணம் வெள்ளநிவாரணம் மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை என்பதுதான். இதேபோல வளர்மதியும் வெள்ளத்தின் போது சரியான நிவாரணப் பணிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே சட்டசபைத் தேர்தலின் போது தோல்வியடைந்தார். எனவே இவர்களுக்கு கவுன்சிலர்கள் பதவிக்கு சீட் கொடுத்து மீண்டும் ரிஸ்க் எடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.