காலில் கட்டுப்போட்ட என்னை கட்சியை உடைப்பதாக கூறிவிட்டார்களே.. சைதை துரைசாமி வேதனை
வீட்டு மாடி படிக்கட்டில், தவறி விழுந்ததால் கால் ஜவ்வு கிழிந்து விட்டது. எனவே காலில், கட்டு போட்டு வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன் என சைதை துரைசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுக கட்சியை உடைக்க சதி செய்வதாக வதந்தி பரப்பப்படுவதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவுக்கு தலைமை ஏற்குமாறு, சசிகலாவை, நேரில் சந்தித்து வலியுறுத்திய முக்கிய நிர்வாகிகளில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர்.
ஆனால், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், சைதை துரைசாமி யாருடைய கண்களுக்குமே தென்படவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
பரவிய தகவல்
இந்நிலையில், ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபாவுடன் சேர்ந்து அதிமுகவை உடைக்க சைதை துரைசாமி முயற்சி செய்கிறார் என்று தகவல்கள் பரவின. சைதை துரைசாமி மட்டுமல்லாது அதிமுகவின் வேறு சிலரும் தீபாவுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக தகவல் பரவி வந்தது.
கால் ஜவ்வு கிழிந்துவிட்டது
இதுகுறித்து, சைதை துரைசாமி தெரிவிக்கையில், டிசம்பர் 31ல், வீட்டு மாடி படிக்கட்டில், தவறி விழுந்ததால், டாக்டர்களை அழைத்து பரிசோதித்து பார்த்தேன். கால் ஜவ்வு கிழிந்து விட்டதாக கூறினர். எனவே காலில், கட்டு போட்டு வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன்.
வதந்தி
பாதிக்கப்பட்ட கால் சரியாக இன்னும் சில பல தினங்களாகும். எனவேதான் வெளியே வர முடியாமல் உள்ளேன். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி என்னை பற்றி வரும் தகவல்கள் வதந்திதான். இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் தீபா
தீபா அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரது இல்லத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே ஜெயலலிதா விசுவாசிகள் அவர் பின்னால் அணிவகுக்க தயாராவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துவரும் நிலையில், அந்த லிஸ்டில் தான் இல்லை என சைதை துரைசாமி கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.