நத்தத்துடன் கூட்டணி வைத்து அரசியலில் மீண்டும் காணாமல் போகும் சைதை துரைசாமி!
சென்னை: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் 'தொழில்' கூட்டணி அமைத்த காரணத்தால் அரசியலில் மீண்டும் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சென்னை மேயர் சைதை துரைசாமி.
எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகளில் சைதை துரைசாமியும் ஒருவர்... 1984-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு அரசியலைவிட்டு ஒதுங்கியே இருந்தார்.
பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென மீண்டும் அதிமுகவில் தலைகாட்டத் தொடங்கினார்... திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. ஆனால் தோற்றுப் போனார் சைதை துரைசாமி.
சென்னை மேயர்
இதனால் 2011 உள்ளாட்சித் தேர்தலில் சைதை துரைசாமி சென்னை மேயராக்கப்பட்டார். சென்னை மேயரானதும் சென்னை அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான உள்ளடி வேலைகளைத் தொடங்கினார். மகன் வெற்றி மூலமாக பல்வேறு அரசு ஒப்பந்தங்களை கையிலெடுத்துக் கொண்டார்.
விடுதலைக்கு பின் கண்டம்...
சைதை துரைசாமி புகார்கள் வந்து கொண்டே இருந்தபோதும் அதிமுக தலைமை அவரை ஓரம்கட்டாமல் வைத்திருந்தது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையான பின்னர் சைதை துரைசாமி குறித்த பல தகவல்களை உளவுப்பிரிவினர் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க அப்போதிருந்து கண்டனம் தொடங்கிவிட்டது...
கூட்டணி அம்பலம்
அதிமுகவில் மெல்ல மெல்ல ஒதுக்கி வைக்கப்பட்டார் சைதை துரைசாமி. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறித்து போயஸ் கார்டன் நடத்திய விசாரணையில் அவருட்ன் சைதை துரைசாமி கூட்டணி அமைத்திருந்தது அம்பலமானது.
ரெய்டு
கரூர் அன்புநாதனை பினாமியாக கொண்டு இந்த கூட்டணி செயல்பட்டது. அண்மையில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்த கூட்டணி பகிரங்கமாக தெரியவந்தது.
அடுத்தடுத்து
அந்த சோதனையின் போது நத்தம் விஸ்வநாதன் வசம் இருந்த கட்சிப் பதவிகள் பறிபோயின. தற்போது நத்தம் விஸ்வநாதனுடனான கூட்டணியால் சைதை துரைசாமி மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
காணாமல் போவார்...
இனியும் அவர் அதிமுகவில் தலையெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி... அரசியல் அரங்கத்தில் மீண்டும் அவர் காணாமல் போகும் நிலைமைதான் உருவாகி உள்ளது.