சென்னை மேயர் சைதை துரைசாமி ராஜினாமா? கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை?
சென்னை: சென்னை மேயர் சைதை துரைசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
2011ஆம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்து வருகிறார்.
மாநகராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், தி.மு.க. கவுன் சிலர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதில் முன்பு மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது சைதை துரைசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர்கள் மீது சைதை துரைசாமி குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மேயர் சைதை துரைசாமி கீழ்ராஜ மங்கலத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு கட்டி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இந்த புகார் எழுந்த சில தினங்களுக்குள் மேயர் சைதை துரைசாமி அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது. எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பெயரை போஸ்டரில் போடக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவுமுதலே இந்த பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில் சைதை துரைசாமி மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று காலை சென்னையில் தகவல் பரவியது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையும் இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே இந்தியா டுடே சார்பில் சென்னை சிறந்த நகரமாக தேர்ந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதை பெறுவதற்காக மேயர் சைதை துரைசாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜினாமா தகவல் பரவி வருவதற்கு காரணம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாறுதல்தான் என்றும் ஒருதகவல் பரவிவருகிறது. எனவே இதுகுறித்து டெல்லியில் உள்ள சைதை துரைசாமியிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அதனை மறுத்துவிட்டார். மேலும் கடுமையாக பேசிய அவர், "செத்தவன் கிட்டேயை செத்துட்டியா?" என்றுகேட்பதா என்றும்கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகும் தகவல் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.