சசி பெயரை சொன்னதால் ஓரம்கட்டப்பட்ட சைதை... விரைவில் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்?
சைதை துரைசாமி விரைவில் ஓபிஎஸ் அணிக்கு இடம் பெயருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சைதை துரைசாமி சசிகலா தரப்பு அதிமுகவை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் ஓபிஎஸ் அணியில் சேர்வார் என கூறப்படுகிறது.
அதிகாரப் போட்டியால் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரண்டாக உடைந்தது. கட்சியின் நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து சசிகலா கூடாரத்தில் இருந்து வெளியேறினர்.
அதிமுக சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை பலர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் மற்றும் பொதுமக்களின் கருத்தைக் கருதி பலர் சசிகலா அணியிலிருந்து விலகலாமா என ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா என்றதால் ஓரங்கட்டப்பட்ட சைதை
ஜெயயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை அனைவரும் சின்னம்மா என்றே அழைத்து வருகின்றனர். சசிகலாவை சின்னம்மா என அழைத்த அவரது அதரவாளர்கள் மத்தியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி சசிகலா என்று அவரது பெயரை குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது. இதனால் அவர் சசிகலா தரப்பால் ஓரங்கட்டப்பட்டார்.
சசி கூடாரத்தை புறக்கணிக்கும் சசி
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சசிகலா தரப்பு நடத்தும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தினகரன் தலைமையில் நடந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. உடல் நிலை சரியில்லை என்றும் காலில் அடிப்பட்டிருப்பதாகவும் கட்சி தலைமைக்கு காரணம் தெரிவித்தார்.
ஒன்றாக செயல்பட கோரிக்கை
காலில் அடிப்பட்டுள்ளதால்தான் வரவில்லை என்று நம்பி சசி குரூப் அவரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அமைப்பு செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதிமுகவில் ஓபிஎஸ் அணி தனியாக செயல்பட தொடங்கிய நிலையில், இருதரப்பும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டார்.
கோயில் திருவிழாவில் பங்கேற்பு
இதனால் சைதை துரைசாமி மீதான சசி குரூப்பின் கோபம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி டிடிவி.தினகரனுடனான சந்திப்பை புறக்கணித்து துரைசாமி திருவொற்றியூரில் அய்யா வழி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டார்.
நடவடிக்கை எடுக்க தயக்கம்
டிடிவி தினகரனை சைதை துரைசாமி வேண்டும் என்றே புறக்கணிப்பதை உணர்ந்த சசி குரூப் அவர் மீது இப்போது நடவடிக்கை எடுத்தால் அவர் ஓபிஎஸ் அணிக்கு தாவி விடுவார் என்பதால் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் ஓபிஎஸ் அணிக்கு தாவல்
அதேநேரம் ஓபிஎஸ் அணியில் உள்ள பொன்னையனுடன் சைதை துரைசாமி பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஓபிஎஸ் அணிக்கு அவர் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.