சைதை எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா.... பால்குடம் எடுத்து வழிபாடு
சென்னை: ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான இன்று சைதாப்பேட்டை எல்லையம்மன் கோவிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பால்குடம் எடுப்பது, தீ மிதிப்பது என தமிழகம் முழுவதும் பிரபல அம்மன் ஆலயங்கள் மட்டுமல்லாது சின்னச் சின்ன காவல் தெய்வங்கள் உள்ள அம்மன் ஆலயங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.
ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.
பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் "வாராஹி நவராத்திரி' இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.
ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.
சென்னை சைதாப்பேட்டை சலவையாளர் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் 33வது ஆடி மாத திருவிழா களை கட்டியது. இதனை முன்னிட்டு பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.