நீதிபதி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகர் ஜெய்.. அபராதத்தோடு, லைசென்சும் 'கட்'!
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெய்க்கு 5200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி, வாமனன், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெய். இவர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலையில் குடி போதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார்.
அப்போது அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் ஜெய் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.
பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
இதுதொடர்பான வழக்கில் ஆஜராகமால் போக்குக்காட்டி வந்தார் ஜெய். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.
நேற்று ஆஜராகவில்லை
ஆனால் அவர் நேற்று வரை ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சரண்
இதையடுத்து 2 நாட்களுக்குள் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜெய்
அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வாழ்க்கையையும் சினிமா போல் நினைத்தீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நீதிபதி முன்னிலையில் நடிகர் ஜெய் ஒப்புக்கொண்டார்.
இருசக்கர ஊர்தியில் வந்த ஜெய்
இதையடுத்து அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அவருக்கு 5200 ரூபாய் அபராதத்தையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்தது. கார் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடிகர் ஜெய் இன்று இரு சக்கர ஊர்தியில் கோர்ட்டுக்கு வந்தார்.